கொஞ்சம் வெயில்... கொள்ளை கரன்ட்... நீங்களே தயாரிக்கலாம்... சோலார் ஸ்பிரேயர்!

''நமக்குத் தேவையான எல்லா விஷயங்களும், கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கு. என்ன... கொஞ்சம் மெனக்கெட்டு யோசிச்சா, எல்லாமும் சாத்தியப்படும்''
- தன் அனுபவத்திலிருந்து இப்படி அழகாகப் பாடம் சொல்கிறார் உடையாம்பாளையம், கார்த்திகேயன். இவர், தன் சொந்த முயற்சியில் சூரிய சக்தியில் இயங்கும் விசைத் தெளிப்பான் (சோலர் பவர் ஸ்பிரேயர்) ஒன்றை மிகஎளிதாக வடிவமைத்து, அதன் மூலம் நிறைந்தப் பலனை அடைந்து கொண்டிருக்கிறார்.
உடையாம்பாளையம், கோயம்புத்தூர் மாநகர எல்லைக்குள் வரும் பகுதி, இதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு... காய்கறி, கீரை, மலர் சாகுபடி என்று தினந்தோறும் காசு தரும் 'மார்க்கெட் வெள்ளாமை’ செய்து நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.  ரசாயன முறையில் விவசாயம் செய்தாலும் சரி... இயற்கை வழியில் செய்தாலும் சரி... விசைத் தெளிப்பானின் பயன்பாடு முக்கியமே. ஆனால், பெட்ரோல் விலை உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு என்று பலவும் தாண்டவமாடுவதால்... விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்துவதில் ஏக பிரச்னை. 'என்ன செய்யலாம்' என்று யோசித்தபோதுதான் நண்பர்கள் உதவியுடன் 'சூரியசக்தி விசைத் தெளிப்பான்' உருவாக்கிவிட்டார் கார்த்திகேயன்.


தன் கீரை வயலுக்கு மருந்து தெளித்த கையோடு, பக்கத்தில் உள்ள நண்பரின் செண்டுமல்லித் தோட்டத்தில் தெளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரைச் சந்தித்தோம். ''நாங்க எல்லாம் பட்டணத்து விவசாயிங்க, ஒரு காலத்துல பருத்தி, வாழை, கரும்புனு செழிப்பான வெள்ளாமை கொடிகட்டி பறந்த ஊருங்க இது. நகரமயமாக்கல்ல தொழிற்சாலை, குடியிருப்புகள்னு... காடு, கழனியெல்லாம் கட்டடமாயிடுச்சு. இதுலயும் ஒரு நன்மை இருக்குங்க. என்னைப் போல சிலர் விவசாயத்தை இன்னும் விடாம செய்யறதால... நல்ல லாபம் பார்க்கிறோம். மக்கள் தொகை பெருகப் பெருக, அவங்களுக்கான காய்கறி தேவையையும் மனசுல வெச்சு சாகுபடி செய்து, உள்ளூரிலேயே உற்பத்திப் பொருளுங்கள வித்து தீர்த்துடறோம். ஆனா, ஆள் பற்றாக்குறை இருக்கறதால... கால் ஏக்கர், அரை ஏக்கர்னுதான் விவசாயம் பண்ண முடியுதுங்க'' என்று ஆதங்கப்பட்டவரிடம், சூரியசக்தி விசைத் தெளிப்பான் உருவாக்கியது பற்றி கேட்டோம்.
படுத்தி எடுத்த ஸ்பிரேயர்கள்!
''அரை ஏக்கரில் பல ரக கீரைகளைப் போட்டிருக்கேன். இன்னொரு அரை ஏக்கரில் வாழை நட்டிருக்கேன். பக்கத்து வயல்கள்ல செண்டுமல்லி, கோழிக்கொண்டைனு மலர் சாகுபடியை நிறையபேரு செய்றாங்க. அவங்க தோட்டத்துப் பயிருக்கெல்லாம் பூச்சிக்கொல்லி தெளிக்கிற வேலையும் நமக்கு வந்து சேரும். மேலும் கீழும் கையால இழுத்து இழுத்து, ஹேண்ட் ஸ்பிரேயர் மூலமாதான் ஆரம்பத்துல தெளிச்சேன். ஆனா, ஒரு பத்து டேங் அளவுக்குத் தெளிக்கறதுக்குள்ள கை வலி எடுத்துடும். 'சரி, பவர் ஸ்பிரேயர்’ல தெளிக்கலாம்னு அதையும் செஞ்சு பார்த்தேன். பெட்ரோல் விக்கிற வெலைக்கு, என்னை மாதிரி சின்ன அளவுல விவசாயம் பண்றவங்களுக்கு கட்டுப்படியாகல. போதாக்குறைக்கு அது போடுற சத்தம் அக்கம்பக்கத்துல தொந்தரவா இருக்குனு குற்றச்சாட்டு வேற. வெயிட்டும் ரொம்ப அதிகம். பொழுதன்னிக்கும் சுமந்து தெளிக்கறது ஆகற காரியம் அல்ல.

''காலையில 7 மணியில இருந்து சாயந்திரம் 3 மணி வரை தொடர்ந்து, இதைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி தெளிக்கிறேன். கரன்ட் பத்தி கவலைப்படாம சரியான நேரத்துல தெளிச்சு பயிர்களைக் காப்பாத்த முடியுது. சில பயிர்களுக்கு அதிகாலை நேரத்துலதான் மருந்து தெளிக்கணும். அதுக்கு தோதா முந்தின நாள் சாயந்திரமே கரன்ட் மூலமா சார்ஜ் போட்டு வெச்சுட்டா... தெளிக்கலாம். விடிஞ்சதும் சார்ஜ் ஏத்துற வேலையை ஆட்டோமேட்டிக்கா சோலார் பேனல் கவனிச்சுக்கும்.
டெல்டா மாவட்டங்கள்ல, மின்சாரம் சரிவர கிடைக்காத இந்தக் காலத்துல... ஹேண்ட் ஸ்பிரேயர், பவர் ஸ்பிரேயர்னு வெச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டுதான் அங்கெல்லாம் விவசாயிங்க நெல்லு பயிர் பண்றாங்க. அவங்களுக்கு இது பயன்தரும். வாடகைக்குத் தெளிக்கறவங்களுக்கும் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தக் கரைசல்னு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறவங்க... நல்லா வடிகட்டி பயன்படுத்தணும்'' என்று ஆலோசனைகளையும் தந்தவர், நிறைவாக,
''சோலார் மாதிரியான இயற்கை சக்திகள் குறித்த விழிப்பு உணர்வு மக்கள்கிட்ட ரொம்ப குறைவாவே இருக்கு. என்னை மாதிரி சின்ன விவசாயிகளும் சூரியசக்தியைப் பயன்படுத்தி பலனடையறதுக்குத் தேவையானத் திட்டங்கள், முயற்சிகள்னு அரசாங்கம் முழு உத்வேகத்துடன் செயல்படுத்தினா... எரிபொருளுக்காக எங்கயும் நாம கையேந்தத் தேவையே இருக்காது'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
நிஜம்தானே!
தொடர்புக்கு,
கார்த்திகேயன்,
செல்போன்: 93677-89456

நன்றி விகடன் கட்டுரை


23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்..........!




  அமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 17 வயது சிறுவன் ஹிந்தி மொழி உட்பட்ட 23 மொழிகள் பேசும் திறமை பெற்றுள்ளதனால் அறிஞர்கள் அவனை “hyperpolyglot ” பாராட்டியுள்ளனர்.

மிகக்குறகிய காலத்தில் 23 மொழிகள் பேசும் திறமை பெற்றதால் உலகம் பூராகவும் ஈர்க்கப்பட்டுள்ளான்.  தனது திறமையை வீடியோக்களில் பதிவு செய்து அதனை யுரியூப் வெளியிட்டதன் மூலம் உலகம் பூராவும் புகழ் பெற்றுள்ளான்.

யூதர் மொழியை முதன்முதல் படிக்க ஆரம்பித்த போதே மொழிகளில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் யூதர் மொழியில் ஒரு வாரத்திலேயே தேர்ச்சி பெற்றதாயும் அறியப்படுகின்றது.

நியுயோர்க் டாக்சி சாரதிகளுடன் உரையாடுதல், வெளியிடங்களில் மக்களுடன் பேசிப்பழகுதல், e- mail, Skype மூலம் உலகம் பூராகவும் மக்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவர் மொழிப்பயிற்சியைப் பெற்றுள்ளார்.

இந்தி, அரபு, குரொஷயன், டச்சு, ஆங்கிலம், பார்சி,  பிரெஞ்சு, ஜேர்மன், ஹவுசா,  ஹீப்ரு, இந்தொனேசியன், இஷிஹோசா  தென் ஆபிரிக்க ஆட்சி மொழி, இத்தாலி, மான்டரியன், ஒஜிப்வே அமெரிக்க பழங்குடி மக்கள் மொழி, பெர்சியன், பாஷடோ, ரஷ்யன், ஸ்பானிஷ, ஸவாஹிலி, துருக்கிஷ், வோலாப், யித்திஷ் என 23மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

டோனரின் திறமையைப் பாராட்டிய பல்லாயிரக்கணக்கான உலக மக்கள் மேலும் அவரது திறமையையும் சிறப்பையும் வெளிப்படுத்துமாறு ஊக்கமளித்துள்ளனர்.

‘‘நிலத்தை எடுத்தால்... நக்சலைட்டாக மாறுவோம்...!’’




 கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூர் வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் கெய்ல் இந்தியா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, 7 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்க அரசு முடிவு செய்தது. நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் சென்னை, அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலைய கூட்டரங்கில் கருத்து கேட்கப்பட்டது.

தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. நேற்று 2வது நாளாக திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முதலாவதாக காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடம் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் கருத்து கேட்டார்.

கூட்டத்தில் திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுகா அய்யன்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பேசும்போது, “என்னிடம் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த மாதம் 13ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்து, இங்கு எரிவாயு குழாய் பதிக்கிறோம். உங்கள் விவசாய நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் உடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர்.

எனக்கு விவசாயம் தவிர வேறு வேலை தெரியாது. இதையும் எடுத்துக் கொண்டால் எப்படி உயிர் வாழ்வது, தொழில் இல்லாதபோது எங்களால் வாழ முடியாது. எனவே என்னை வாழவழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன்'' என்று கூறி தேம்பி, தேம்பி அழுதார்.

நாராயணன் என்ற விவசாயி பேசுகையில், “மேற்கு வங்க மாநிலம் சிங்கூர் பகுதியில் கார் கம்பெனி அமைப்பதற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்தனர். அங்குள்ள விவசாயிகள் நக்சலைட்டுகளாக மாறி நிலத்தை கையகப்படுத்த வந்த அதிகாரி கள் மற்றும் போலீசாரை அடித்து விரட்டினர். அதேபோன்று எங்கள் பகுதியிலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு மதிப்பு அளிக்காமல் கெய்ல் நிறுவன அதிகாரிகள் நடந்து கொண்டால் நாங்களும் நக்சலைட்டுகளாக மாறுவோம்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகளை நக்சலைட்டுகளாக மாற்றி விடாதீர்கள்'' என்றார். இவரது பேச்சை ஆமோதிப்பதுபோன்று அனைத்து விவசாயிகளும் கைதட்டி வரவேற்றனர்.

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!







மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க!!!!!!

கடல் எல்லையை எச்சரிககும் கருவி- தமிழனின் கண்டுபிடிப்பு






சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு: தேசிய அளவில் அங்கீகாரம்

கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.
கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது. இதை தவிர்க்க, சென்னை செயி...ன்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.

இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

வரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது,' என்றனர்.

அப்பாடா... 'காவேரி'.. கடலுக்குள் சென்றது!





நிலம் புயல் சமயத்தில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலை, ஒரு வழியாக நவம்பர் 11 ஞாயிறன்று மாலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டனர். அந்தக் கப்பலில் சுமார் 360 டன் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், எண்ணெய் கசிவு காரணமாக கடல்வாழ் உயிரிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும்
பெரும் கேடு ஏற்படலாம் என்கிற பதைபதைப்பு நிலவிவந்தது. தற்போது அதெல்லாம் மறைந்து நிம்மதி பெருமூச்சு பிறந்திருக்கிறது.

இந்த மீட்புப் பணியில் இயற்கையின் உதவியை நாம் பெருமையோடு மனதில் கொள்ள வேண்டும். ஆம், அமாவாசை மற்றும் பௌர்ணமி என்றால், அந்த நாட்களிலும் அதையொட்டிய சில நாட்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவது வாடிக்கை. இதன் காரணமாக கடலோரங்களில் அலைகள் பெரிதாக எழும். நாளைக்கு (நவம்பர் 13) அமாவாசை எனும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே கடல் கொந்தளிப்பாக இருந்தது... இந்த மீட்பு முயற்சிக்கு கைகொடுத்துள்ளது.

மீட்பு முயற்சிக்கு அரசுத் தரப்பிலிருந்து பெருமுயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், கடலில் இறங்கி கப்பலை தள்ளாத குறையாக சென்னையிலேயே முகாமிட்டு பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தார்.

எல்லாம் சரி, இத்தனை பிரச்னைகளுக்கும்... அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட லட்சக்கணக்கான ரூபாய செலவுகளுக்கும் காரணமே... சரத் பவார் உறவுக்காரர்களுக்குச் சொந்தமான அந்தக் கப்பல்... காலாவதியான கப்பல் என்பதோடு, சுமார் மூன்று மாத காலமாக அந்தக் கப்பலையும், ஊழியர்களையும் அதன் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் விட்டதுதான்.

தற்போது பல லட்ச ரூபாய் வாரியிறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த செலவையெல்லாம் நம் தலையில் (அரசாங்கம்) கட்டுவார்களா... அல்லது பவார் குடும்பம் பெருந்தன்மையோடு இறங்கி வந்து கணக்குப் பார்த்து கொடுக்குமா என்பதுபற்றி உருப்படியான தகவல்கள் இல்லை!

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."இது ஒர் உண்மைக் கதை


ஒரு பெண் புலியின் வாக்குமூலம்,இது ஒர் உண்மைக் கதை. (மீள்பதிவு)

வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச்சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.

உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.

''எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம் பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர். என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன். நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.

''பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?''

''1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார். ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடு தலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!''

''அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?''

''இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!''

''இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?'

''ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!''

''என்ன நடந்தது?''

''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் ரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர். அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப்போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்றுவிட்டோம். எமது போராட்டம் தோற்றுப்போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு ராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக் ஃபாம் முகாமில் தங்கியிருந்தபோது, ராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியா வில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் ராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தை களின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.

அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். 'சோதியா படையணி’யில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர். காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்’ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெட்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்தவண்ணம் இருந்தேன்!'

''விசாரணை சித்ரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?''

''சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத் தீவுக் காடுகளுக்குள் கொண்டுவிட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!'

''நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?'

''பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர். நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்துவிடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு 'பால்... பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!''

''ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?''

''எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!''

''யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?''

''பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்ரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.''

''தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?''

''அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.''

''இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர் களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?''

(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) ''இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர் களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. 'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப்போடு கின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன். (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.

ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப் பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!''

''உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி’ என விமர்சித்...'

(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!''

(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

-நன்றி:  பேஸ்புக்

மரபணு உணவு.... 10 ஆண்டுகளுக்கு தடை!




மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி, தக்காளி, .... உள்ளிட்ட உணவு பொருட்களின் சாகுபடி குறித்து கள ஆய்வு நம் நாட்டில் நடந்து வருகிறது. இந்த வகையான உணவு பொருட்களால், உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள். அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம், இந்த விவாகரம் பற்றி ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்தது. தற்போது அந்த குழு
அறிக்கையை அளித்துள்ளது.

‘‘மரபணு உணவு பொருட்களின் கள ஆய்வை நடத்துவதற்கான தற்போதைய நடைமுறையும், மரபும் திருப்த்திகரமாக இல்லை. எனவே, இவற்றை பெரிய அளவில் மாற்றி அமைத்து வலுப்படுத்த வேண்டும். மரபணு உணவு பொருட்கள் குறித்து ஒட்டு மொத்த ஆய்வை நடத்தினோம். அதன் அடிப்படையில்தான், கள ஆய்வு பணியை 10 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம்.’’

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!


 

தமிழக மின் பற்றாக்குறை தொடர்பாக ஐயா காந்தி அவர்கள் எழுதிய கட்டுரை சமூக வளைதளத்தில் வெளியாகியிருந்தது, அந்த கட்டுரை உங்களுக்காக நண்பர்களே....

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்

று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.

ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.

எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.

கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். “மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.

அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.

அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.

பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.
• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.
• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.
• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது. அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:
• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

அன்புடன்
கோவை. சா.காந்தி,
9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111
நன்றி : தமிழ் கருத்துக்களம் சமூக வலைதளம்

பன்டைய தமிழனின் கட்டிடகலைக்கு சான்று - கல்லனை



பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும்(இப்ப எல்லாம் தண்ணீர் வந்துட்டாலே பெரிய விஷயம்) காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.

நாம் கடல் தண்ணீரில் நிற்கு
ம்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதியபாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ‘ தி கிராண்ட் அணைக்கட் ‘ என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி..

துன்பம் வரும் வேளையிலே சிரியுங்க(சிந்தியுங்கள்)...




நீரின்றி அமையாது உலகு...என்று வள்ளுவர் பெருந்தகை சொல்லிய காலத்தில் இருந்து நீரின் மீது கவனமாக இருந்த தமிழ் சமூகம், இதுவரை தப்பிப்பிழைத்து வந்தது.,ஆனால் இனி அது நடக்காது போலிருக்கிறது.
குடிப்பதற்கும்,விவசாயத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று அண்டை மாநிலத்தை கேட்டால், இப்போதெல்லாம் சண்டைக்குதான் வருகிறார்கள்.

நாமும் நமது நீர் நிலைகளை பிளாட் போட்டு விற்றுவிட்டோம்,மரங்களையெல்லாம் வெட்டி இயற்கையை பாழ்படுத்திவிட்டோம்,ஆற்றில் சாயக்கழிவுதான் ஒடுகிறது மொத்தத்தில் நமது கண்களையே நாமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு குத்திக்கொண்டுவிட்டோம்.

இப்போது தண்ணீர் இல்லை என்று ஒலமிடுகிறோம்,ஒரு செடியைக்கூட நட நேரமில்லாமல் சும்மா ஒலமிட்டு என்ன செய்வது.
வெறுத்துப் போன தண்ணீராபிமானி தனது செலவில் போஸ்டர் அடித்து கண்ணீர் சிந்தியுள்ளார்

வழக்கம் போல சிரித்துவிட்டு போனாலும் சரி, இல்லை கொஞ்சமாவது சிந்தித்து செயல்பட்டாலும் சரி.-  
 
          -செம்மொழி வலைதளம்
 
 ஏதோ நம்மளால முடிந்த அளவுக்கு மரம் வளர்ப்போம்,வளர்க்க முடியாவிட்டாலும் இருக்கும் மரங்களையாவது வெட்டாமல் பாதுகாப்போம்,  நீரினை வீனாக்காமல் பயன்படுத்துவோம், என ஒவ்வொருவரும் நினைக்கும் பொழுதுதான் நம்பளை நாமே காப்பாற்றிகொள்ளமுடியும். சிந்திப்போம் நன்பர்களே..................


‘‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....!


ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும். இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும் போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.


கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..! விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..! இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!

மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!
மீண்டும் ஒரு உலக போர்வந்தால் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதிவரும் நிலையில் அவர்கள் எடுத்திருக்கும் ஆயதம் மிகவும் பயங்கரமான ஒன்றாக உணவுக்கான அரிசியிலேயே காட்ட தொடங்கிவிட்டார்கள். 

இதுலவேற நம்ம கவர்மென்டு சில்லரைவர்தகத்தில் அந்நிய முதலீடுன்னுங்கிற பேர்ல எல்லா நாட்டுகாரனுங்களையும் இந்தியாவுக்குள்ள விட்டு கொஞ்சநாளைக்கு நம்ம பொருள வாங்கிட்டு அப்புறம் அவன் நாட்டிலிருந்து அப்புறம் பிளாஸ்டிக் அரிசியைதான் கொண்டு வந்து விப்பான். நம்ப மக்களும் விலை குறைவா இருக்கேன்னு வாங்கிதின்னு சீக்கிறத்தல போய்சேர போறான். 1940 களில் உள்ளமாதிரி அந்நிய பொருளை வாங்கமாட்டோம்ன்னு கோசம் போட்டு இன்னொரு சுதந்திர போராட்டத்த நடத்த வேண்டிய நிலமைக்கு  ஆளாகபோகிறோம். 

இதைகண்டுபிடித்து  செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும் பத்திரிக்கைதான். அதற்கான லிங்க்
 

ஆங்கிலத்தில் படிக்க லிங்க்

என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக இருக்க கூடும் இது போன்ற போலிகளை தயாரிப்பவர்கள்??


இதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் நன்பர்களே
 

சில்லரை வர்தகத்தில் அந்நியமுதலீடு......?(சிறப்பு பார்வை)




தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்துகொண்டிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குகூட்டனி அரசு. முதலில் டீசல் விலைஉயர்வு ,லிட்டருக்கு 5 ரூ உயர்த்தின பிரச்சனையே இன்னும் முடியலை அதுக்குள்ள சில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலீடுன்னு அடுத்த குண்டை தூக்கிபோட்டுட்டார் நம்ம ‘‘மௌனகுரு” ஓ சாரி நம்ம‘‘ மன்மோகன் சிங்”. 'இந்தியாவையே வாழ வைக்கப் போகிறோம்' என்று சொல்லிக் கொண்டு நாற்பது ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட 'பசுமைப் புரட்சி'தான் இன்றைக்கு பசுமை வறட்சிக்கு காரணமாகிவிட்டது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என்று தேவையில்லாத கருமாந்திரங்களை எல்லாம் விவசாயத்தில் கலந்துவிட்டு... இன்றைக்கு மலட்டு விதைகள் வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

இப்போதே கிட்டத்தட்ட விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் சங்கு ஊதியாகிவிட்டது. இந்த நிலையில், வெளிநாட்டுக்காரன் வந்து விவசாயிகளை வாழ வைக்கப் போகிறானாம்.


உண்மையில் என்ன நடக்கும்?
ஆரம்பத்தில் கூடுதல் விலை தருவது போலவும்... பணத்தை அள்ளி அள்ளி விடுவது போலவும் ஆசை காட்டுவார்கள் ஈமு கோழிகாரன் போல! ஒருகட்டத்தில் உள்ளூர் வியாபாரிகள் எல்லாம் ஒழிந்தபிறகு, 'நான் வைத்ததுதான் சட்டம்... நான் கேட்பது போல் பத்து சென்டி மீட்டர் சுற்றளவு உள்ள கத்திரிக்காய் விளைவிச்சுக் கொடு... 3 அடி நீளமுள்ள முருங்கைக்காயா கொடு... இனிப்பான தண்ணியிருக்கற இளநீரா விளைவிச்சுக் கொடு... வெள்ளைவெளேர்னு மின்னுற அரிசியை கொடு...' என்று கட்டுப்பாடுகளை விதிப்பான் வெள்ளைக்காரன். நம் விவசாயிகள் தடுமாறும்போது... நிலத்தையெல்லாம் கொடுத்துவிட்டு வெளியேறு என்பான்?

   
 பெஸ்ஸி,கோலா போன்ற நிறுவனங்களை  இந்தியாவில கால்ஊனவைச்ச பிறகு என்ன நடந்துச்சு, உதாரனமாக  நம்ம தமிழ் நாட்டுல இருந்த காளிமார்க் சோடா போன்ற குடிசை தொழிலாக  செஞ்சுகிடடுருந்த கம்பெனிகளயே கானோம். இன்னைக்கு ஒரு சில  இடத்துல  கிடைச்சாலும்,  பெஸ்ஸி,கோலா குடுக்கிற பூச்சி மருந்ததானே இந்த மக்கள் வாங்கி குடிக்கிறார்கள். இதே நிலைமைதான் பின்னாளிலும் அமெரிக்கா கத்திரிக்காய் இருக்கா இத்தாலி முருங்கைகாய் இருக்கான்னு  ஒவ்வெரு கடையா கேக்கிற நிலைமையை உண்டுபண்ணபோகிறார்கள் இந்த பெருளாதாரமேதைகள்........!
 

இப்பொழுது நிலக்கரி ஊழலை மறைக்க சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு........?   என்ன கொடுமை இந்தியனே.......

சூரிய சக்தியில இயங்கும் காரை கண்டுபிடித்த தமிழர்


tamil solar car


திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ்.
உலகச் சந்தையில் தமிழ் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

''நான் கண்டுபிடித்துள்ள 'எகோ ஃப்ரீ கேப்’ பார்க்க ரிக் ஷாவின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று பேர் வரை பயணிக்கலாம். சூரிய சக்தி, பேட்டரி, மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சைக்கிளைப் பெடல் செய்வதுபோல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இந்த வண்டியை வடிவமைத்ததும் இதை முதல்முதலில் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பேத்தியும் உதயநிதி ஸ்டாலினும்தான் டெஸ்ட் டிரைவ் செய்தார்கள். உதயநிதி சார் ஓட்டிப் பார்த்ததும் அசந்துவிட்டார். உடனே 'எனக்கு ஒண்ணு பண்ணிக் கொடுங்கப்பா... பெட்ரோல் போட்டு கட்டுப்படி ஆகலை’னு ஜாலியா கமென்ட் அடித்தார்.

இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை. ஒன்று, சார்ஜ் ஏறவில்லை. அல்லது சார்ஜ் ஏறினால் அது வண்டியின் ஓட்டத்துக்குப் பயன்படவில்லை. இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், லட்சக்கணக்கில் பணம் செலவானது. ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன். இது மார்க்கெட்டுக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக ஒரு லட்சம் இருக்கும். ஆனால், பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும் துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது.

என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை மட்டும் மக்கள் சேவைக்காக டிரைவர்களை நியமித்து இயக்க இருக்கிறோம். இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன். இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப் பேர் தொடர்புகொண்டார்கள். பெட்ரோல் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன்.

இவருடைய இன்னொரு ஐடியா பெங்களூரில் இப்போது செம ஹிட். பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதனால், பெங்களூரில் இவருடைய வெப் சைட்டான ‘www.earnwhileyoudrive.in’-ல் கார் உரிமையாளர்கள் பதிவு செய்தால் போதும். அந்த காரின் நான்கு கதவுகளிலும் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழகான படங்களாக வைத்துக் கொள்ளலாம். இந்த விளம்பரங்களும் 'எகோ ஃப்ரி பெயின்ட்டிங்'கில் செய்யப்படுவதால் காரின் கதவுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. கார் உரிமையாளர் விரும்பும்போது விளம்பரத்தை காரின் கதவுகளுக்குப் பாதிப்பு இல்லாமல் அகற்றிக் கொள்ளலாம். காரின் உரிமையாளருக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையும் கிடைக்கிறது. பெங்களூரில் இவருடைய கான்செப்டைப் பின்பற்றி பஸ்களும் நிறைய ஓடுகின்றனவாம்.

யப்பா... சீக்கிரமா இங்கேயும் இந்த கான்செப்டைக்கொண்டு வாங்கப்பா. நிறையப் பேர் கார் தவணைத் தொகை கட்ட முடியாம கஷ்டப்படுறாங்க!



 நன்றி ; தமிழ் பேஸ்புக்

வரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்”



ன்னடா, ஒரு மில்லபற்றி எழுதுரானே , நாம பாக்காத மில்லா எத்தனை ரைஸ்மில்ல பாத்திருப்போம் எத்தனை மாவு மில்ல பாத்திருப்போம் எத்தனை மர மில்ல பாத்திருப்போம்ன்னு நீங்க நினைக்கலாம், உங்களில் சிலர் கேள்விபட்டிருக்கலாம் சிலருக்கு தெரியாமகூட இருக்கலாம் தெரிஞ்சவங்களுக்கு சரி ஆனால் தெரியாதவங்களுக்காகதான் இந்த பதிவை எழுதுகிறேன் நண்பர்களே,


                   “சாத்தம் அறுவை மில்”  இது வரலாற்றின் மிகப்பெரிய நினைவுகளை சுமந்து  கொண்டிருக்கிறது, பன்டைய காலத்தில் எ ங்கு செல்வங்கள் கொட்டிகிடக்கு அதை எப்படி நம்நாட்டுக்கு கொண்டுபோகலாம் என்று திரிந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைபடுத்திய பிறகு இங்குள்ள இயற்கைவளங்களை கொள்ளையடிக்கும் விதமாக அந்தமான்-நிகோபார் தீவுகளில் உள்ள மிக உயர்ந்த மற்றும் விலை மதிக்கமுடியாத அரிய மரங்களான “பாடாக் ”  இதை “அந்தமான் படாக்” என்றே கூறுவார்கள் அந்த அரிய மரங்களை  தங்கள் நாட்டின் கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்ட அவர்கள் அந்த மரங்களை வெட்டி   தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். முழு மரமாக கொண்டு செல்வதில் மிகவும் சிறமம் ஏற்படவே , மரங்களை அறுத்து கொண்டு செல்ல தீர்மானித்து, போர்ட் பிளேயரிலிருந்து சுமார் 5 கி.மீ துரத்தில் உள்ள சாத்தம் எனும் தீவில் மிக பிரம்மாண்டமாக, அத்தீவின் பரப்பளவில் 40% அளவுக்கு மிகப்பெரிய அறுவைமில்லை 1888 ம் ஆண்டு  கட்டி அதிலிருந்து இந்த மரங்களை அறுத்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் அதை மேற்கத்திய நாடுகளுக்கும்  ஏற்றுமதி செய்து விற்பனை செய்தனர். அந்தமான்-நிகோபார் தீவுகளில் அறுக்கபட்ட படாக் மரத்தினால் அமைக்கபட்ட மரச்சுவர்கள்தான் இன்றளவும் இங்கிலாந்தின் பக்கிங்காம் அரன்மனையில் உள்ளன என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.



இரண்டாம் உலகப் போரின்போது, அதாவது, 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த மர அறுவை ஆலையின் மீது ஜப்பானியர்கள் சரமாரி குண்டு மழை பொழிந்தனர். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் கருகி இறந்ததோடு... கடல் கொந்தளித்து வெளிக்கிளம்பி, பாறைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதனால் முற்றிலும் முடங்கிப்போன ஆலை, ஜப்பானியர்களிடம் இருந்து அந்தமான் மீட்கப்பட்ட 1946-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. ஆம் அன்று பழமையான இயந்திரங்களை கொண்டு இயங்கிய இந்த ஆலை இன்று அதிநவீன இயந்திரங்களுடன் இயங்கிவருகிறது. தற்போதைய சூழலில் மரங்களை வெட்டுகிறார்களே என நினைக்கவேண்டாம் எவ்வளவு மரங்களை வெட்டுகிறார்களோ அதைவிட கூடுதலாக மூன்று மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் ஆசியாவிலே மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை இதுதான் என்பதும் குறிப்பிடதகுந்த விஷயம்.

              நன்றி மீண்டும் சந்திப்போம்- S.ராஜ்குமார்

விஜய்,விஜய்,விஜய்..........?




           


ஒரே குழப்பமா இருக்கா ஆமாம் ரசிகர்களே, விஜய் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு நல்லதலைப்பை தேடிக்கொண்டிருக்கிறார் மதராஸபட்டினம் விஜய். இந்நிலையில் தற்போது புதிய செய்தியாக படத்தின் வில்லனாக பிரபல பிண்னனி பாடகர் ஜேசுதாசின் மகனும் பிண்னனி பாடகருமாகிய விஜய் ஜேசுதாஸ் நடிக்கிறார் ஆக படத்தில் 'மூன்று விஜய்', படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இயக்குநர் விஜய் இயக்கிவரும் ”தாண்டவம்” படத்தின் ஆடியோ இன்று ரிலீஸ் ஆவது குறிப்பிடதக்கது,எனவே தனது அடுத்த படத்திற்கான வேலையை துவங்கிவிட்டார் மதராஸபட்டினம் விஜய். இளையதளபதி விஜயும் தனது துப்பாக்கி படத்தினை முடிக்கும் தருவாயில் நடித்துகொண்டிருக்கிறார், தனது அடுத்தபடம் யோகன் முடிந்தவுடன் இப்படத்தின் படப்படிப்பு துவங்கும்  என எதிர்பார்கப்படுகிறது.

தமிழனின் கட்டிடகலையின் உச்சம் ' அங்கோர்வாட் கோயில்'- ஓர் ஆச்சர்யதகவல்

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.


இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!



இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

நன்றி் : பார்கவி கேசவன்   (சமூக வலைதளம்)



ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!

வாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவது உலகம் முழுக்க பொதுவான விதி. இந்த நகர்மயமாதலின் விளைவாக சென்னை போன்ற பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. பிளாட்பாரத்தில் கிடந்தாவது நகரத்தில் பிழைக்கலாம் என வருபவர்கள் உண்டு.



ஆனால் ‘ஒரு கிராமம் கூட்டு முயற்சி எடுத்தால், நகரங்களில் இருப்பவர்கள்கூட வேலை தேடி அங்கு ஓடிவருவார்கள்’ என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ஒரு சீன கிராமம். 2 ஆயிரம் பேர்கூட வசிக்காத ஒரு குக்கிராமத்துக்கு வந்து தங்கி 20 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அந்த கிராமத்தின் சாதனையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?சீனாவின் ஜியாங்ஸு மாகாணத்தில் இருக்கிறது ஹுவாக்ஸி கிராமம். கடந்த 1961ம் ஆண்டு ஆரம்பித்து, ஐம்பது ஆண்டுகளில் இந்த கிராமத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், ‘வானத்துக்குக் கீழே இருக்கும் கிராமங்களில் நம்பர் ஒன் கிராமம்’ என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த கிராமத்தின் மாற்றங்களுக்கு சில நாட்களுக்குமுன்பு பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது 328 மீட்டர் உயரமுள்ள பிரமாண்ட ஹோட்டல் இங்கு திறக்கப்பட்டது. உலகின் டாப் 15 உயரக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஒரு கிராமத்தில் இப்படி ஒரு வானுயர்ந்த கட்டிடம் வருவதற்குக் காரணம், வூ ரென்போ என்ற மனிதர்.
ஒவ்வொரு வருஷ முடிவிலும் எவ்வளவு லாபம் வந்திருக்கிறது என்று கணக்கு பார்க்கிறார்கள். அதில் ஐந்தில் ஒரு பங்கை கிராம மக்கள் பிரித்து எடுத்துக்கொள்கிறார்கள். மீதி நான்கு பங்கு திரும்பவும் தொழில்களில் முதலீடாகிவிடுகிறது.இப்படியாக ஐம்பது வருடங்களில் இந்த கிராம மக்களின் முதலீடு ஆயிரத்து 300 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. சீன பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகி இருக்கிறது இந்த கிராம மக்களின் கூட்டு நிறுவனம். ஒரு காலத்தில் சைக்கிள்கூட சொந்தமாக வைத்தில்லாத இந்த கிராம மக்கள், சமீபத்தில் கப்பல் போக்குவரத்து நிறுவனம் தொடங்கி இருக்கிறார்கள். சீக்கிரமே விமான நிறுவனம் தொடங்கும் உத்தேசம் இருக்கிறதாம். ஹுவாக்ஸி கிராமத்தில் இப்போது 2 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிராம கமிட்டியே சகல வசதிகளோடு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறது. 18 வயதைத் தாண்டிய எல்லோருக்கும் கார்கள் உண்டு. மருத்துவம், கல்வியில் ஆரம்பித்து, வீட்டுக்கு சமையல் எண்ணெய் வரை எல்லாவற்றையும் கிராமக் கமிட்டி தந்துவிடும்.பக்கத்து நகரத்துக்குப் போனால்தான் நல்ல ஆஸ்பத்திரி, நல்ல ஸ்கூல் என்ற கதை இங்கு இல்லை. உலகின் மிகத் தரமான பள்ளியும் மருத்துவமனையும் இந்தச் சின்ன கிராமத்தில் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 60 லட்சம் ரூபாயாவது சேமிப்பு கைவசம் இருக்கும். ‘ஏழை’ என்ற அடையாளத்தோடு யாரையும் இந்த கிராமத்தில் பார்க்க முடியாது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள்தான் கிராமங்களையும் நகரங்களையும் நிர்வகிக்கிறார்கள். அப்படி இந்த கிராமத்தின் நிர்வாகிதான் வூ. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை மாட்டு வண்டிகளும் குடிசைகளுமாக லோக்கல் வரைபடத்தில்கூட இடம்பிடிக்கத் தகுதியில்லாத கிராமமாக இருந்தது ஹுவாக்ஸி. வூ ரென்போ இதை மாற்றியமைத்தார்.
வெறும் விவசாயம் மட்டுமே போதாது என்பதை உணர்ந்த அவர், கிராமக் கமிட்டி சார்பில் தொழிற்சாலைகள் உருவாக்கினார். கிராமமே அவர் பின்னால் இருந்தது. விவசாயத்தோடு தொடர்புடைய தொழில்கள், பிறகு ஸ்டீல் தொழிற்சாலை, அதன் தொடர்ச்சியாக ஜவுளித் தொழிற்சாலை என வளர்ச்சிகள் வந்தன. எல்லாவற்றுக்கும் கிராம மக்கள் எல்லோருமே முதலாளிகள்; தொழிலாளிகளும் அவர்கள்தான். ‘வளர்ச்சி தேவை என்றால் லீவ் எடுக்காமல் உழைக்க வேண்டும்’ என கிராமமே முடிவெடுத்தது. இன்றுவரை இங்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை நாட்கள்தான்!ஒருநாள் கூட ஓய்வின்றி உழைத்தாலும், அவ்வப்போது குடும்பத்தோடு பொழுதுபோக்க சிறந்த பூங்காக்களையும் ஊரில் கட்டி வைத்திரு க்கிறார்கள். தாஜ்மகால், எகிப்தின் பிரமிடு என உலக அதிசயங்களின் மாதிரி வடிவங்களைக் கொண்ட தீம் பார்க் இங்கு ஸ்பெஷல்.இந்த கிராமத்தின் செழிப்பு எல்லோரையும் வசீகரிக்க, இப்போது அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்தும், தொலைதூர நகரங்களிலிருந்தும் பலர் வேலை தேடி வருகிறார்கள். இப்படி சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்திருக்கிறது கிராமம். இந்த கிராமத்தின் வெற்றிக் கதையை நேரில் பார்க்க, உலகெங்கிலுமிருந்து வருஷத்துக்கு 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள்.‘நவீன சோஷலிஸ கிராமம்’ என்ற பெருமையோடு உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த இந்த வெற்றிக்கதைக்குப் பின்னால் உழைப்பும் கூட்டு முயற்சியும் மட்டுமே இருக்கிறது. இந்தியாவிலும் ஏராளம் கிராமங்கள் இருக்கின்றன.முயற்சி செய்வார் யாரோ....!

சாதனை தமிழச்சியின் சோதனை நிலைமை......?

சாந்தி........... இந்த பெயர் ஞாபகம் இருக்கின்றதா...?  ஆம்  2006 ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மறு நிமிடமே அவரின் நடத்தப்பட்ட சோதனையில் பென்மைதன்மை குறைவாக உள்ளவர் என அறிவிக்கபடடு பதக்கத்தை இழந்து அவமானத்தால் இருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றபட்டவர். அவரின் இன்றைய நிலை தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் நாள் ஒன்றுக்கு 200 ருபாய் சம்பளத்திற்கு செங்கல் சூலையில் வேலை செய்கிறார், இன்று நாம் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதற்கு எவ்வளவு சிறமப்படுகிறோம். அதற்கு காரணம் அது போன்ற திறமையான வீரர், வீராங்கனைகள்  தங்களின் ஏழ்மை காரணமாக வெளிஉலகிற்கு தெரியாமல் போவதும் மற்றும் அரசியல் லாபத்திற்காக திறமையற்றவர்களுக்கு கொடுக்கபடும் முன்னுறிமையும்தான்.
shanthi athlet

தென் ஆப்ரிக்காவின் தடகள வீராங்கனை காஸ்டர் செமன்யா அவருக்கு நடத்தப்பட்ட பாலினசோதனையில் தோல்வியடைந்தாலும் அவர் நாடும் நாட்டுமக்களும் அவருக்கு உறுதுனையாக நின்று அவரை தற்போது நடைபெறஉள்ள 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைத்ததுடன் மட்டுமல்லாது அவரை தங்கள் நாட்ட தேசியகொடியையும் ஏந்திசெல்ல வைத்துள்ளனர். ஆனால் இங்கு சாந்திக்கோ யாரும் உதவ முன்வரவில்லை மாறாக அவரை தற்கொலை முயற்சிக்குத்தான் தள்ளியிருக்கிறார்கள், அரசியல் தலைவர்களிடமோ விளையாட்டு நிர்வாகிகளிடமோ எதில் ஊழல் செய்யலாம் எனும் என்னம் தான் மேலோங்கி இருக்கின்றது , இடையே கொஞ்சமாவது இது போன்ற திறமையானவர்களையும் ஊக்குவித்து அவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்கலாமே.......
   
- S.ராஜ்குமார்

ஐந்துவயது சிறுவனின் அபார கின்ணஸ் சாதனை

 
indian skatting guinness record

மஹாராஷ்டிராவில் ஐந்து வயது சிறுவன் தனது அபார ஸ்கேட்டிங் திறைமையினால் கின்ணஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான். ராகேஷ் தேஷ்பாண்டே எனும் சிறுவன் கோலப்பூரில் ஓர் உலகசாதனை முயற்சியாக  பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சியினர் முன்னிலையில் 48.2 மீட்டர் (158ft 2in) தூரம் சுமார் 27 கார்களின் கீழே உடலை வளைத்து சறுக்கி கடந்து இச்சாதனையை படைத்துள்ளான். இதற்கு முன் மும்பையில் ரோஹன் அஜித் என்பவர் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்த்திய 38.68 மீ (126.11) சாதனையை முறியடித்து தன்வசம் ஆக்கியுள்ளான் இந்த அபாரசிறுவன்.
அவன் செய்த சாதனையை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்,



                      

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More